Monday, March 9, 2009

விடிந்தும் இரவை விரட்டாதவன்
விழித்தும் விழியை திறக்காதவன்
இமைகள் எதற்கென புரியாதவன்
இதுவரை வெளிச்சம் புணராதவன் .
கருப்பு வெள்ளைக் கனவுகளில்
கடவுள் மட்டும் வருவதில்லை
காலங்கடந்து போனாலும் இவன்
தியானம் என்றும் கலைவதில்லை .
கண்கள் மூடி நடந்து கொண்டே
மோனத் தவம் செய்கின்றான்
கைகள் நீட்டி காற்றிலேறி
ஏகாந்தப் பயணம் போகின்றான் .
தோள் மீது கை வைத்து வரிசையில்
செல்லும் இவனும் எறும்பும் ஒரு ஜாதி
கண்ணை பறித்து தன் கண்ணில் வைக்க
யாரேனும் உண்டா எனத் தேடிச்செல்லும்
இவனும் சிவனும் சரி பாதி .
கனத்த இருட்டின் கால்கள் பிடித்து
விடியல் வேண்டி கெஞ்சுகிறான்
தன்னை நோக்கிகண்கள் திருப்பி
தனக்குள் தானே கொஞ்சுகிறான் .
தன் கண்ணை கட்டி விளையாடும்
விதியைத் தேடி அலைமோதும்
இவன்
தேடும் உலகம் இங்கில்லை
உலகைத் தாண்டிப் போய்
தேடவும் சிறகில்லை .
இவன்
வைக்க படாத புள்ளிகளிடையே
வரையப்பட்ட ஒரு கோலம் .


No comments:

Post a Comment